Friday, December 17, 2010

வாழும் காலத்தை பேசும் முத்துவேல் கவிதைகள்

புத்தாயிரத்தில் மலர்ந்துள்ள இளம் கவிஞர்களுள் நம்பிக்கையளிக்கும் ஆளுமையாகத் திகழ்கிறார் முத்துவேல். மிகச் சாதாரண கணத்தையும் இவர் அவதானிக்கும் விதம் வித்தியாசாமக இருக்கிறது. தன்னைக் கடந்து போகும் காலத்தை அதீத அழுத்தத்துடன் தனது கவிதைக்குள் உறையச்செய்யும் வித்தையை கற்றுள்ளார் முத்துவேல். உதாரணமாக மனிதர்கள் இன்றைய தொழில்நுட்பத்தில் வெறும் Binary களாக மாறிவிட்ட அவலத்தைப் பேசும் கீழே உள்ள ரொம்ப நாளாச்சே கவிதை நமக்குள் ஆழ்ந்த துக்கத்தை கவியச் செய்கிறது. முத்துவேலை கவிதை வாசகர்கள் பின்தொடரலாம்.

ரொம்ப நாளாச்சே...

செல்பேசியிலிருந்த
எண்ணை(யும்)
அழிக்கிறேன்

செத்துவிட்டார்
தர்மலிங்கம்

அவரைப் பார்க்க ஆசை

ஏற்பாடு செய்யும் நண்பருக்கே
விருந்தாவாள்
விலை மகள்

இடமும், பணமும் என
எல்லாமும் ஏற்கும் புரவலரோ

ஓடிப்போன
தன் மனைவியின்
உடைகளை, நகைகளை
விலை மகளுக்கு அணிவித்து
நாற்காலியில் அமரச்செய்து
விலகி உட்கார்ந்து
பார்த்து ரசித்து
விக்கித்து அழுவதோடு சரி.

ஒரு எலக்ட்ரிஷியனின் பிரபஞ்ச தரிசனம்

ஒரு தொழிற்கல்வி நிறுவனத்தில் பயின்று
எலக்ட்ரீஷியனாக வெளியேறுகிறான்
அவனுக்கு அளிக்கப்பட்ட சான்றிதழ்
அப்படித்தான் சொல்கிறது
பழகுனராக ஒரு பெரிய நிறுவனத்தில் சேர்ந்து
மெல்ல மெல்ல மின்சாரத்தை அறியத்துவங்குகிறான்
கண்ணுக்குத் தெரியாத மின்சாரம் அவனுக்கு
மிகவும் வியப்பை ஏற்படுத்துகிறது
அச்சமூட்டுகிறது
மரியாதையை ஏற்படுத்துகிறது
பெருமையளிக்கிறது
மெய்சிலிர்க்கவைக்கிறது
தன் சட்டைப்பையில் வந்தமர்ந்துகொண்ட
டெஸ்டரை முதன்முறையாகப்
பெருமையாகப் பார்த்துக்கொள்கிறான்
தன்வாழ்வின் தோள்மீது
கைபோட்டு அரவணைத்துக்கொண்டு
பின்தொடரச் செய்த மின்சாரத்திற்கு
நன்றி சொல்லிக்கொள்கிறான்
யாருமற்ற அந்நேரத்தில்
மெல்ல எழுந்து
ஒரு பெரிய மெயின் ஸ்விட்சை நெருங்கி
இருகைகளாலும் பயபக்தியோடு தொட்டு
கண்ணீர் துளிர்க்கும் விழிகளில்
ஒற்றி வணங்கிக்கொள்கிறான் அந்தப் பையன்

இன்றை...
இன்று
சரியான நேரத்தில் எழுந்ததால்
பதட்டமின்றிப் புறப்பட முடிந்தது.
இன்று
வீட்டை விட்டு
வெளியேறுகையில்
எனக்கு மிகப்பிடித்தப் பாடலை
ஒலி/ளி பரப்பியிருந்தார்கள்.
இன்று உணவகத்தில்
வரிசையின் நீளம்
மிகக் குறைவு.
உணவும் நன்றாக வேறிருந்தது.
இன்று
என் சக ஊழியன்
விடுப்பில் இருந்தான்.
இன்று
மேலதிகாரியின் வசவுகள் இல்லை
இன்று
பதவி உயர்விற்கான
செய்தி வந்தது.
இன்று
மாலையிலிருந்தே துவங்கிவிட்டது
நாளைய விடுமுறை.
இன்று
வெளியாகியிருந்த
என் கவிதைகளை
யாரோ ஒருவர்
தொலைபேசியில்
அழைத்துப் பாராட்டினார்.
இன்று
என் விருப்பப் பட்டியலிலான
புத்தகங்களின் கட்டு
அஞ்சலில் வந்தது.
இன்று
ஒட்டடை படிந்த என்
மிதிவண்டிக்குக் காற்றடித்து
சுத்தம் செய்தேன்.
இன்று
மனைவி மக்களுடன்
வெளியே சென்றிருந்தேன்
இன்று
தண்ணீர்த் துப்பாக்கி
வாங்கித் தந்த மகிழ்ச்சியில்
மகன் விளையாடிக் கொண்டிருந்தான்.
இன்று
புகைக்கவேயில்லை.
இன்றை
பிரிய மனமில்லாமல்
உறங்கிபோனேன்
துக்கத்தோடு.

No comments:

Post a Comment