Friday, December 3, 2010

எதிர்பார்ப்பிற்குறிய நூல்கள் - சென்னை புத்தக கண்காட்சி - 2011

இப்பகுதியில் வரும் புத்தக கண்காட்சியை ஒட்டி வெளியாக உள்ள, எனது கவனத்திற்கு வந்த சில நூல்களைப் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இலக்குமி குமாரன் ஞானதிரவியத்தின் “ஆம் எனும் கிணறு” - சிறுகதைத் தொகுப்பு

90 களின் தொடக்கத்திலிருந்து கவிதைத் துறையில் இயங்கி வருபவர் இலக்குமி குமாரன் ஞானதிரவியம். சுஜாதாவின் Good book ல் இடம்பிடித்தவர். இவரது “என்பதாயிருக்கிறது” தமிழின் சிறந்த கவிதைத் தொகுப்புகளுள் ஒன்று. கவிஞராக அறியப்பட்ட ஞானதிரவியத்தின்' அகஒட்டு' நாவலைப் படித்துவிட்டு திகைத்துப் போனேன். அத்திவெட்டி எனும் கிராமம் சார்ந்த கள்ளர் இனக்குழுவைப் பற்றிய ஒரு காத்திரமான பதிவு இது. கிராமங்களில் நிகழும் சாதிப் பஞ்சாயத்தின் மூர்க்கத்தைப் பேசுகிறது இப்புதினம். உலக மயமாக்கலின் பாதிப்புகளை மீறியும் இன்னும் நம் நிலப் பிரபுத்துவ குரூரங்கள் அழிந்துவிடவில்லை என்பதை வெளிப்படுத்தும் படைப்பு. இப்புதினம் ஞானதிரவியத்தின் புனைகதைத் திறமையை வெளிப்படுத்தியது.

சமீபத்தில் இவரது “ஆம் எனும் கிணறு” சிறுகதைத் தொகுப்பின் மெய்திருத்தப் பதிப்பை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பல இடங்களில் சிரிப்பை அடக்க முடியவில்லை. மிகுந்த ஹாஸ்ய உணர்வைத் தூண்டுவதாக இத்தொகுப்பின் கதைகள் அமைந்திருக்கின்றன. அதே வேளையில் இடதுசாரி பின்புலம் கொண்ட இவரது அரசியல் சார்பும் இக்கதைகளில் வெளிப்படுகிறது. அழிந்து வரும் கிராமிய மதிப்பீடுகளை பற்றி பேசும் இக்கதைகள் வரும் புத்தகச் சந்தைக்கு அன்னம் வெளியீடாக வரவுள்ளது. சிறுகதை விரும்பிகள் தவறவிடக்கூடாத நல்ல தொகுப்பு.

No comments:

Post a Comment