Sunday, December 5, 2010

டிசம்பர் 06 - நீதிமன்றமா? கட்டப்பஞ்சாயத்துக் கூடமா?

            டிசம்பர் 6. பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள். நமது போலி மதச்சார்பின்மையின் மீது நமக்கிருந்த கடைசி நம்பிக்கையை இந்துத்துவவாதிகள் கடப்பாறை கொண்டு தகர்த்த நாள். இவ்வளவு நாளாய் பாபர் மசூதி இடிப்பு வழக்கை இழுத்தடித்து வந்த நீதிமன்றம் தீர்ப்பு கூறிய போது அது தன் பங்குக்கு ஒரு கடப்பாறையைப் போட்டது. வர வர நீதிமன்றங்கள் கட்டப்பஞ்சாயத்து செய்யுமிடமோ என்கிற ஐயம் ஏற்படுகிறது. ராமர் பாலம், பாபர் மசூதி எல்லாவற்றிற்கும் சான்றாக வெகு மக்கள் நம்பிக்கையை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஆனால் நீதி என்பதும், வெகுமக்கள் நம்பிக்கை என்பதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டது. நீதிமன்றம், மத்திய அரசு, தொல்லியல் துறை, இந்துத்துவா சக்திகள் என எல்லோரும் இந்தத் தீர்ப்பில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். இந்த தீர்ப்புக்கு எதிர்வினையாக இசுலாமியர்களின் மௌனம் கனத்த துயரின் வெளிப்பாடு. இந்துக்களின் மேலாண்மையை இசுலாமியர்கள் அனுசரித்துப் போக வேண்டும் என்பதைத் தான் தமது தீர்ப்பில் நீதி மன்றம் வேறு வேறு வார்த்தைகளில் கூறியிருக்கின்றது. பெரியார், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக்  கொளுத்தச் சொன்னார். அவர் சொன்னதற்கான நியாயங்கள் இன்னும் உயிரோடு இருக்கின்றன. அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது, பாபர் மசூதி இடிப்பு வழக்கு,  பல்வேறு பிரச்சினைகளில் தனியார்மயமாக்கலுக்கு ஆதரவு என நீதிமன்றங்களின் தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானதாகவே இருந்து வருகிறது. சமூக நீதி, மனித உரிமைகள் போன்றவற்றில் அக்கறை உள்ளவர்களுக்கு டிசம்பர் 06 ஒரு கருப்பு தினம். இந்திய வரலாற்றில் கருப்பு தினங்கள் அதிகரித்துக் கொண்டு வருவதைக் கண்டு சனநாயகத்தில் நம்பிக்கை உடையவர்கள் கவலைப்பட வேண்டும். 

No comments:

Post a Comment