ஆற்றுப்படை
– 1
கவிஞனே
இத்தேசத்தை விட்டு வெளியேற
இதுதான் சரியான தருணம்
துப்பாக்கிகளைக் கவிஞர்களுக்கெதிராக
பிரயோகிக்கும் கருணையற்றவர்களல்லர் நாங்கள்
வேற்றுதேசத்திற்கான கடவுச்சீட்டை
இலவசமாகத் தறுமளவிற்கு பரந்த மனம் கொண்டவர்கள்
இது 56 அங்குல அகலம் கொண்ட
மார்புடையவர்களுக்குச் சொந்தமானது
மேலும், தேசமோ மார்போ
எங்களுக்கு அகன்றிருக்க வேண்டும்
இத்தேசத்தை மைக்ரான் வினாடிகளில்
முன்னேற்றும் பணிக்கு உங்கள் சின்னஞ்சிறு கனவுகள்
இடையூறாயிருக்கின்றன
காடுகளில் புதையுண்டுகிடக்கும் கிழங்குகளை மட்டுமே
காணும் அளவிற்கு புராதனமானது உங்களது கண்கள்
அதற்கும் கீழ் குடிகொண்டிருக்கும் டாலர் கடவுளை
ஏனோ உங்களால் தரிசிக்க முடிவதில்லை
இருளைத்தின்னும் உலைகளைக்கூட
நெருப்பு மிருகங்களாய்த்தான் பார்க்கிறீர்கள்
ஏழுமலை ஏழுகடல் தாண்டி விண்ணும் மண்ணும்
சங்கமிக்கும் புள்ளியை அடையும்
கடவுச்சீட்டு சட்டைப்பையில் கனத்துக்கொண்டிருக்கிறது
தேச வளர்ச்சிக்கு மனைவியையும் காவுகொடுப்பவர்கள்
கண்ணீர்.. ரத்தம்.. அறங்கள்..
இந்த அழுகுணி ஆட்டத்தை நீங்களேன்
துருவத்தின் பனிக்காடொன்றில் விளையாடக்கூடாது
புரிந்துகொள்ளுங்கள்
நிறைய வேலைகளிருக்கிறது
புரையோடிய நீதிதேவதையின் கண்களில்
சற்றுமுன்புதான் லென்ஸ் பொருத்தியிருக்கிறோம்
காவி ஒளியில் தேசத்தின் புதிய வரலாற்றை
அவள் வாசிக்கத்தொடங்கியிருக்கிறாள்
என்னதானிருந்தாலும் பாரத தேசத்தின்
பத்தினி மரபில் வந்தவளல்லவா அவள்
ராமராஜ்யத்திற்கு ராவணவதங்களின் நியாயத்தை
அவளுக்குப் புரிய வைத்திருக்கிறோம்
சூர்ப்பநகையின் சகோதரர்களான நீங்களோ
இன்னும் அறுபட்ட மூக்கிற்கான
நியாயத்தை எதிர்பார்த்து நிற்கிறீர்கள்
வரலாற்றுக்கும் நிகழ்வுக்குமிடையே
துருத்திக்கொண்டிருக்கும் முரண்களை
இடித்தும் எழுப்பியும் பின்நவீனத்துவப்பணியில்
உங்களைவிடவும் முன்செல்கிறோம்
குருதி மணக்காத தெருக்களில் காதல் செய்யவும்
ஆயுதங்கள் மெளனித்த நகரங்களில்
கேளிக்கைகளைத் தொடரவும்
அணுக்கழிவுகளில்லாத கடல்களில்
படகுகனை மிதக்கவிடவும்
குழந்தைகளின் சடலங்கள் ஒதுங்காத நதிகரைகளில்
நாகரீகம் வளரவும்
இந்த பூமியிலிருந்து வெகுதூரம்
நீங்கள் விலகிச்செல்லும் கடவுச்சீட்டு
இன்னும் கனத்துக்கொண்டிருக்கிறது
கவிஞனே
இத்தேசத்தை விட்டு வெளியேற
இதுதான் சரியான தருணம்.!
No comments:
Post a Comment