Sunday, December 26, 2010

விருத்தாசலத்தின் புதுமைப்பித்தன்

எனது நிலாவை வரைபவன் புதினத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன் பழமலயிடம் கொடுத்திருந்தேன். பிறகு அதனை மறந்தும் விட்டேன். பழமலையினுடைய இலக்கிய கோட்பாடுகளிலிருந்து விலகியவன் என்ற போதும் அவரது கவிதைகள் மீது எனக்கு மரியாதை உண்டு. பழமலய் தனது விமர்சனங்களை வெளிப்படையாக தெரிவிக்க தயங்காதவர். அதே வேளையில் முரண்களோடு தோழமை கொள்ளத் தெரிந்தவர். ஆச்சரியமாக புதினங்களை படிப்பதில் விருப்பம் காட்டாத அவர் நிலாவை வரைபவன் குறித்து சமீபத்தில் எனக்கு எழுதியிருந்தார். சிக்கலான அமைப்பில் எழுதப்பட்டிருந்த அப்புதினத்தை சரியாக அவர் விளங்கிக் கொள்ளாத போதிலும் கூட அது குறித்து அவர் எழுதிய பதிவு முக்கியமானது என்பதால் இங்கு அவ்வுரையாடலை அளிக்கிறேன்.

த. பழமலையின் விமர்சனம்

       இப்படி ஒரு நூல் - புதினம் - வெளிவந்திருப்பதாக அறிந்தேன். கவிஞர் கரிகாலன் சிறுகதைகள் எழுதினார். அடுத்த கட்டமாக புதினமும் எழுதியுள்ளார். படிக்கக் கொடுக்கும்படி கவிஞரிடம் கேட்டிருந்தேன். 27.04.08 -இல் தன் கையெழுத்திட்டுக் கொடுத்தார். படிக்க நேரம் கிடைத்து ஆர்வமும் தோன்றி 30.11.10 ல் படித்து முடித்தேன். இரண்டாவது நாள் படித்து முடித்துவிடுவது என்று இரவு ஒரு மணி வரை விழித்துப் படித்தேன். கரிகாலன் இந் நூலுக்கு என்னிடமிருந்து எந்த மதிப்புரையும் கேட்கவில்லை. எதிர்பார்க்காமல் கூட இருக்கலாம். மூன்றாண்டுகள் முடியப் போகிறது. அவர் இதனை மறந்துவிட்டு அடுத்த வேலைக்குப் போயிருக்கலாம். போகக்கூடியவர்.

     நூலை படித்துக் கொண்டு வந்த போது எதிர்பாராத வகையில், பக்கம் 114 ல் பழமலையின் கசந்த மரம் கவிதை பற்றிய குறிப்பைப் படித்தேன். நானாக இருந்தால் இந்நூலை அன்பளிப்பாகத் தரும் போது இந்தப் பக்கத்தைக் குறிப்பிட்டுத் தந்திருப்பேன். கரிகாலனின் ஆளுமைப் பண்பு தனித்தன்மையானது!

         எழுத்தாளர் சுஜாதாவை ஒருமுறை சென்னையில் அவர் வீட்டில் பார்த்த போது “ உங்கள் ஊர்தானே (விருத்தாசலம்) கவிஞர் கரிகாலன்!” என்று நலன் கேட்டார். சுஜாதா போன்றவர்களின் கவனிப்புக்கு ஆளானவர் கரிகாலன். அதாவது எதிர்கால நம்பிக்கைக்குரிய எழுத்தாளர்.

           நான், கரிகாலனின் காணி ஊரான மருங்கூர் சென்றிருக்கிறேன். திருமுதுகுன்றத்தில் அவர் புதிதாகக் கட்டிக் குடியேறியுள்ள வீட்டிலும் ஓர் இரவு தங்கியிருக்கிறேன். கரிகாலன் ஓர் ஆசிரியர். கவிஞர் அவருடைய காதல் மனைவியாரும் ஓர் ஆசிரியை. புதின எழுத்தாளர். தனிக்குடும்பம். மூன்று குழந்தைகள்.

         கரிகாலனின் நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கன. அவர் கைப்பணம் செலவழித்துச் சிற்றிதழ், இலக்கியக் கூட்டங்கள், நூல் வெளியீடு, அண்மையில் விருது வழங்கல் எனச் செயல் ஊக்கம் உள்ளவர். பகுத்தறிவு, பொதுவுடைமை.. எனப் பயில்பவர்.

       இடையில் ஏதோ ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட்டு குடும்பப் பிரச்சினைக்கு ஆளாகி உள்ளார் எனக் கேள்விப்பட்டேன். அவரிடமே கலந்து பேச விரும்பினேன். நேராமல் போனது.

      இந்தப் புதினத்தில் கரிகாலன் அதைத்தான் விவரித்துள்ளார். எனக்குப் புதினங்களில் அதிக பழக்கமில்லை. என்றாலும் இலக்கிய நடப்புகளின் தொடர்பில் இருப்பதால், எடுத்துரைப்பதில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுடன் சிறிதே அறிமுகம் உண்டு.

    கரிகாலன் புதிய புத்தகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி எனத் தன் அறிவையும் ஆளுமையையும் விரிவு செய்துகொண்டிருப்பவர். பழைய பஞ்சாங்கமாகத் தேங்கிவிடாமல் உடன்கால உணர்வுடன் இயங்குபவர். இவையே இந்தப் புதினமாக உருவாகியுள்ளது.

    இப்படைப்பின் தொழில்நுட்ப விதிகள் சற்றே சிக்கலானவை. துப்பறியும் புதினங்கள் ஒருவகை என்றால் இது ஒருவகை. இவற்றுள்ளும் வாசகரும் துப்பறிய வேண்டியவர் ஆகி விடுகிறார்!

     கரிகாலன் குடும்பத்தை ஓரளவு நேரில் அறிந்தவன் என்கிற முறையில் இக்கண்பொத்தி விளையாட்டில் கலந்து கொள்வது எளிதாக இருந்தது. அல்லாத நிலையில் வாசகர்கள் கண்கள் கட்டிவிடப்பட்டவர்களாய்த் துழாவ வேண்டியது தான். பிறகு குருடன் பாலைக் கொக்காகப் புரிந்து கொள்ளும் கதைதான்!

    இந்தப் பிடுங்கல்களுக்காகவே நண்பர் ஒருவர் நாவல்கள் படிப்பது இல்லை. வாழ்க்கை வரலாறுகளை விரும்பிப் படிப்பார். அவருக்கு எழுத்து உண்மை பேச வேண்டும். கதையெல்லாம் விடக்கூடாது!

    புதினம், வரலாறு இல்லை. புனைவுகளைக் கொண்டது. இந்தப் பொய்மை - பொய் வேசம் போடுவது - ஒரு தேவைக்கானது. தேவை என்பது படிக்க வைப்பது. படிக்க வைப்பதிலும் உத்தி.

    படைப்பில் உத்தி பிரிந்து வருபவர்களை இனம் கண்டு தேர்ந்தெடுப்பது படைபாளிகள் திறமை. இதுவும் ஒரு விளையாட்டுதான். அறிவு விளையாட்டு.

     ஆசிரியர் நிறையவே ஆட்டம் காட்டுகிறார்.

     அவர் விளையாடத் தெரிந்தவர். ஆட்டம் காட்டுகிறார்.

     இப்புதினம் மரக்கட்டையாக இல்லாத, எரியும் கரியாக உள்ள ஒருவர் அடுத்தடுத்த தேடல்களிலும் தேர்வுகளிலும் எதிர்கொள்ளும் அவத்தைகளைப் படம்பிடிக்கிறது. “வருங்கால உலகத்தை” வாழ்நாளிலே வாழத்துணிபவர்கள் இரக்கத்திற்கு உரியவர்களே. அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை அதிகம்.

    படித்தவர்கள் விவகாரத்தில் அடுத்தவர்கள் தலையிட முடியாது. நேர்மையான முயற்சிகள் கூடத் தவறாகப் புரிந்துகொள்ளப்படும். அவர்களாகத்தான் முன்வர வேண்டும்.

   ஒரு கட்டத்தில் உளவியல் மருத்துவர்களைப் பார்ப்பார்கள். யாவும் திரைமறைவு நாடகமாக இருக்கும். மூன்றாமவர்கள்  தங்களுக்கு இடையில், சூசகம், அனுமானம்...எனத்தான் பேச வேண்டியிருக்கும்.

   தாங்கள் காதலித்துத் திருமணம் செய்துகொள்பவர்கள் நடுவில் உடைமை உணர்வைப் போலவே விடுபடும் உணர்வும் இயல்பானதே, சிக்கலே இதுதான்!

    புதினம் “இப்படி முடிகிறதே” என்றால், “வாழ்க்கை எப்படியும் முடிவது அல்லவா?” என்பதே விடையாக இருக்க முடியும். குறிப்பிட்ட இந்த குடும்ப பிரச்சினை - கணவன் இன்னொரு பெண்ணை விரும்புவது - மனதளவில் பெண் ஆணாகவும், ஆண் பெண்ணாகவும் மாறுவதில் முடிகிறது. அடக்கு அல்லது அடங்கு!

   இறுதி வெற்றி, வீட்டை விட்டு வெளியேறிய மனைவி திரும்பி வருவதும், கணவன் வெளியேறுவதும், திரும்பி வராததுமா?

    கரி்காலனின் அடுத்த புதினம் மனைவி வெளியேறுவதும், திரும்பி வராததுமாக இருக்கலாம். ஆணைப் பெண் துறப்பது, வீட்டை விட்டு வெளியேறுவது, இப்படியும் நடந்து வரவே செய்கின்றன.

    இப்படி ஏன் இவர்கள் வெளியேறிக்கொண்டும், திரும்ப வந்து கொண்டும்? குடும்பம், பிள்ளைக்குட்டிகள் என இருப்பதால் தானே?

    குடும்பமும் குழந்தைகளும் இல்லாத ஊர், உலகம் தான் எதிர்வரும் கால உலகம்.
 
   பிறகு இவர்களுக்கு வாழ்க்கையும், உலகமும் என்னவாக இருக்கமுடியும்?

    இவ்வாறான கேள்விகளுக்கு விடை இல்லை என்பதற்காக அல்ல, ஒரு விடையைத் தேடுவதற்காகத்தான் இப்புதினம்.

    புதினப் பாடுபொருள் காதலா,  குடும்பமா, பள்ளியா, குழந்தைகளா, சமூகமா, அரசியலா? யாவுமாக அலசப்படுவதால் எதுவுமாக எஞ்சவில்லை. யாவுமாகி நிற்பதாகச் சொல்லலாம்.

    கவிஞர் புதினம் இயற்றுவதில் உள்ள குறையையும் நிறையையும் ஒரு சேர இப்புதினத்தில் காணலாம். குறை, கவிதை நடை, நிறையும் அதுவே தான்.

    தகவல்களை எவ்வளவு தரலாம்? ஓரிடத்தில் உளவியல் பாடமே நடத்துகிறார்(பக். 139-140). அதைப் பாடத்தோடு தொடர்புபடுத்துவதுதான் ஆசிரியரின் திறமை. எப்படித் தரவேண்டும் என்பது தெரிந்தவர்.

     மணிமுத்தாற்றங்கரை எழுத்தாளர்களுள் கரிகாலன் “மிகு புதுமை” எழுத்தாளர்.  “விருத்தாசலம் புதுமைப் பித்தன்”.

ஜான் பாஸ்கோ - ஒளியைத் தேடும் கலைஞன்

         ஜான் பாஸ்கோ இந்தியாவின் மிகச் சிறந்த புகைப்படக் கலைஞர்களுள் ஒருவர். அவர் என் நண்பர் என்பதில் எனக்கும் பெருமை. ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றும் பாஸ்கோவுக்கு புகைப்படக் கலை பொழுதுபோக்கல்ல. அதுதான் வாழ்க்கை. கலையை வாழ்வின் ஆதாரமாகப் பற்றிக் கொண்டவர்களுள் ஜான் பாஸ்கோவும் ஒருவர். பனி, மழை, வெய்யில் எனப் பருவங்களை நிலம், விலங்கு, மனிதன் என இயற்கையின் பல்வேறு தோற்ற நிலைகளை, இருளை, ஒளியை, வண்ணங்களை - இவ்வாறு விடாது தேடிப் பயணிப்பவர் பாஸ்கோ. தன் கலையை ஒரு போதும் வணிகமாக்குவதில் விருப்பமில்லாதவர். அமெரிக்கப் புகைப்படக் கலைஞர் சாம் ஆபெல் இவரை வெகுவாகக் கவர்ந்தவர். மிகக்குறுகிய காலத்தில் மிகச்சிறந்த புகைப்படக்கலைஞராக உருவெடுத்திருக்கும் போராஸ் சௌத்ரி (24)யும் பாஸ்கோவை பாதித்தவர்.

              ஒரு கலைஞருக்குரிய பலவீனங்கள் பாஸ்கோவுக்கும் உண்டு. லௌகீக அம்சங்கள் பலவற்றை கண்டுகொள்ளாதவர். தவிப்பு, நிறைவின்மை, தேடல் போன்ற மனநிலையில் எப்போதும் இருப்பவர். பெரும்பாலான விடுமுறை நாள்கள் இவரது கலைத் தேடலின் பயனநாட்களாகவே கழியும். கடந்த ஆண்டு இவர் புதுச்சேரி அல்லயன்ஸ் பிரான்சிஸில் நடத்திய “கலர்ஸ் ஆஃப் லைஃப்” எனும் புகைப்பட கண்காட்சி ஆர்வலர்களின் கவனத்தை கவருவதாக அமைந்திருந்தது. இவரது புகைப்படங்கள்  நேஷ்னல் ஜியாக்ரபி, பெஸ்ட் போட்டோகிராபி போன்ற சர்வதேச இதழ்களிலும் ஆனந்த விகடன், குங்குமம் போன்ற உள்ளுர் இதழ்களிலும் வெளியாகியுள்ளன.

            சென்ற ஆண்டு புதுவை அரசின் சுற்றுலா வளர்ச்சித் துறை நடத்திய புகைப்படப் போட்டியில் இவரது புகைப்படம் முதல் பரிசைப் பெற்றது. அதுபோன்று hp “பருவநிலை மாற்றங்கள்” எனும் தலைப்பில் நடத்திய போட்டியில் கலந்து கொண்டு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசை வென்றிருக்கிறார். சமீபத்தில் “புகைப்படக் கலையின் அடிப்படைகள்” எனும் தலைப்பில் பயிற்சிப் பட்டறை ஒன்றையும் பாஸ்கோ நிகழ்த்தியிருக்கிறார்.

          ஆங்கில / தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த வாசிப்பும் தீவிர ஈடுபாடும் கொண்டவர். இவரின்ன் மின்னஞ்சல் முகவரி <mjohnbasco60@gmail.com>. பாஸ்கோவின் புகைப்பங்கள் சில உங்கள் பார்வைக்கு.







Friday, December 17, 2010

எதிர்பார்ப்பிற்குறிய நூல்கள் - சென்னை புத்தக கண்காட்சி - 2011

அளம், மாணிக்கம், கீதாரி, கற்றாழை, ஆறுகாட்டுத்துறை, கண்ணகி இப்புதினங்களின் வரிசையில் சு. தமிழ்ச்செல்வியின் பொன்னாச்சரம் புதினம் சென்னைப் புத்தக கண்காட்சியை ஒட்டி உயிர்எழுத்து பதிப்பகத்திலிருந்து வெளிவர உள்ளது. ஆடுமேய்ப்பவர்களின் இனக்குழு வாழ்வின் அழகையும் அவலத்தையும் கீதாரி நாவலில் பதிவு செய்திருந்தார் சு. தமிழ்ச்செல்வி. வெட்டவெளியில் தங்களது ஆடுகளோடு வாழ்வை எதிர்கொள்ளும் கீதாரிகளின் மனஉறுதியை இப்புதினம் வெளிப்படுத்தியது. நாடோடி வாழ்க்கையின் இன்னல்களை பொற்றேக்காட்டிற்கு பிறகு மிகத்துல்லியமாக விவரிக்கப்பட்டிருந்தது கீதாரியில் தான். இதன் தொடர்ச்சியே பொன்னாச்சரமும். குறிப்பாக இவ்வினக்குழுவில் பெண்களின் அல்லற்பாடுகளை காத்திரத்துடன் பகிர்ந்து கொள்கிறது இப்புதினம்.  மிக ஈரமான மொழிநடையில் தனக்கே உரிய விசேஷ உரையாடல்களுடன் இப்புனைவின் பக்கங்களை விவரித்துச் செல்கிறார் புதின ஆசிரியர். எதார்த்தவாத அழகியலை விரும்பும் வாசகர்களுக்கு இப்புதினம் ஒரு கொடை.

வாழும் காலத்தை பேசும் முத்துவேல் கவிதைகள்

புத்தாயிரத்தில் மலர்ந்துள்ள இளம் கவிஞர்களுள் நம்பிக்கையளிக்கும் ஆளுமையாகத் திகழ்கிறார் முத்துவேல். மிகச் சாதாரண கணத்தையும் இவர் அவதானிக்கும் விதம் வித்தியாசாமக இருக்கிறது. தன்னைக் கடந்து போகும் காலத்தை அதீத அழுத்தத்துடன் தனது கவிதைக்குள் உறையச்செய்யும் வித்தையை கற்றுள்ளார் முத்துவேல். உதாரணமாக மனிதர்கள் இன்றைய தொழில்நுட்பத்தில் வெறும் Binary களாக மாறிவிட்ட அவலத்தைப் பேசும் கீழே உள்ள ரொம்ப நாளாச்சே கவிதை நமக்குள் ஆழ்ந்த துக்கத்தை கவியச் செய்கிறது. முத்துவேலை கவிதை வாசகர்கள் பின்தொடரலாம்.

ரொம்ப நாளாச்சே...

செல்பேசியிலிருந்த
எண்ணை(யும்)
அழிக்கிறேன்

செத்துவிட்டார்
தர்மலிங்கம்

அவரைப் பார்க்க ஆசை

ஏற்பாடு செய்யும் நண்பருக்கே
விருந்தாவாள்
விலை மகள்

இடமும், பணமும் என
எல்லாமும் ஏற்கும் புரவலரோ

ஓடிப்போன
தன் மனைவியின்
உடைகளை, நகைகளை
விலை மகளுக்கு அணிவித்து
நாற்காலியில் அமரச்செய்து
விலகி உட்கார்ந்து
பார்த்து ரசித்து
விக்கித்து அழுவதோடு சரி.

ஒரு எலக்ட்ரிஷியனின் பிரபஞ்ச தரிசனம்

ஒரு தொழிற்கல்வி நிறுவனத்தில் பயின்று
எலக்ட்ரீஷியனாக வெளியேறுகிறான்
அவனுக்கு அளிக்கப்பட்ட சான்றிதழ்
அப்படித்தான் சொல்கிறது
பழகுனராக ஒரு பெரிய நிறுவனத்தில் சேர்ந்து
மெல்ல மெல்ல மின்சாரத்தை அறியத்துவங்குகிறான்
கண்ணுக்குத் தெரியாத மின்சாரம் அவனுக்கு
மிகவும் வியப்பை ஏற்படுத்துகிறது
அச்சமூட்டுகிறது
மரியாதையை ஏற்படுத்துகிறது
பெருமையளிக்கிறது
மெய்சிலிர்க்கவைக்கிறது
தன் சட்டைப்பையில் வந்தமர்ந்துகொண்ட
டெஸ்டரை முதன்முறையாகப்
பெருமையாகப் பார்த்துக்கொள்கிறான்
தன்வாழ்வின் தோள்மீது
கைபோட்டு அரவணைத்துக்கொண்டு
பின்தொடரச் செய்த மின்சாரத்திற்கு
நன்றி சொல்லிக்கொள்கிறான்
யாருமற்ற அந்நேரத்தில்
மெல்ல எழுந்து
ஒரு பெரிய மெயின் ஸ்விட்சை நெருங்கி
இருகைகளாலும் பயபக்தியோடு தொட்டு
கண்ணீர் துளிர்க்கும் விழிகளில்
ஒற்றி வணங்கிக்கொள்கிறான் அந்தப் பையன்

இன்றை...
இன்று
சரியான நேரத்தில் எழுந்ததால்
பதட்டமின்றிப் புறப்பட முடிந்தது.
இன்று
வீட்டை விட்டு
வெளியேறுகையில்
எனக்கு மிகப்பிடித்தப் பாடலை
ஒலி/ளி பரப்பியிருந்தார்கள்.
இன்று உணவகத்தில்
வரிசையின் நீளம்
மிகக் குறைவு.
உணவும் நன்றாக வேறிருந்தது.
இன்று
என் சக ஊழியன்
விடுப்பில் இருந்தான்.
இன்று
மேலதிகாரியின் வசவுகள் இல்லை
இன்று
பதவி உயர்விற்கான
செய்தி வந்தது.
இன்று
மாலையிலிருந்தே துவங்கிவிட்டது
நாளைய விடுமுறை.
இன்று
வெளியாகியிருந்த
என் கவிதைகளை
யாரோ ஒருவர்
தொலைபேசியில்
அழைத்துப் பாராட்டினார்.
இன்று
என் விருப்பப் பட்டியலிலான
புத்தகங்களின் கட்டு
அஞ்சலில் வந்தது.
இன்று
ஒட்டடை படிந்த என்
மிதிவண்டிக்குக் காற்றடித்து
சுத்தம் செய்தேன்.
இன்று
மனைவி மக்களுடன்
வெளியே சென்றிருந்தேன்
இன்று
தண்ணீர்த் துப்பாக்கி
வாங்கித் தந்த மகிழ்ச்சியில்
மகன் விளையாடிக் கொண்டிருந்தான்.
இன்று
புகைக்கவேயில்லை.
இன்றை
பிரிய மனமில்லாமல்
உறங்கிபோனேன்
துக்கத்தோடு.

Saturday, December 11, 2010

பாரதி - 129

இன்று பாரதியின் 129 வது பிறந்த தினம். பாரதியின் கவிதைகள், பாரதியின் கவித்துவ மனநிலை இரண்டுமே முக்கியமானது. “ நெட்டை மரங்களென நின்று புலம்பினர்”,
“ பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளலாகாது பாப்பா”, “ பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”, “ நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ”, “ஆதலினால் காதல் செய்வீர்”, “வீழ்வேன் என நினைத்தாயோ” என பாரதி பல கவி வரிகள் எத்தகைய சோர்விலிருந்தும், எத்தகைய துயரத்திலிருந்தும் கடந்து செல்வதற்கு துணையாய் இருந்திருக்கின்றது. தனது குடும்பத்தின் வறுமையை சிந்திக்காமல் ஓரு சித்தனைப் போல் வாழ்ந்தவன் பாரதி. அவன் எனது ஆன்மீக வழிக்காட்டி. அவன் விழியின் ஒளியிலிருந்து துலக்கம் பெறுகிறது என் பாதை. அவனது தடங்களை ஒட்டி நடப்பதில் துயரொன்றுமில்லை. பாரதி உனக்கு என்னுடைய வணக்கமும் முத்தங்களும்.

மதுவழிச் சாலை

நாம் சென்றடைய வேண்டிய
எல்லா இடங்களுக்கும் முன்பாக
ஒரு மதுக்கடை இருந்து தொலைக்கிறது
இந்த நகரத்தில்

மருத்துவமனை
தேவாலயம்
அஞ்சலகம்
பள்ளிக்கூடம்
பேருந்து நிலையம்
யாவற்றை அடைவதற்கு முன்பும்
மதுவின் நெடி நம் பாதையின் உறுதியை
லேசாகக் குழப்புகிறது

முந்தைய நாள் மனைவிக்களித்த
சத்தியத்தின் நிறம் மங்கத் தொடங்குகிறது
குழந்தைகளுக்கான தேவைகள்
இலக்கை நோக்கி நகர்த்த
மதுக்குவளையிலிருந்து வெளியேறும்
உளறல்களும் சிரிப்பொலிகளும்
நம் வானம்
இன்னும் சிறிய இடைவெளியிலிருப்பதை
உணர்த்துகின்றன

ஆட்டோவிலிருந்து கொண்டு
ஓட்டுநரிடம் ஒரு முழுப்புட்டி
விஸ்கியை வாங்கி வரச்சொல்லும்
வேசியை கடவுள்தான் அனுப்பி வைத்திருப்பாரோ

இது ஒரு கலகக்கார அரசாகத்தான்
இருக்க வேண்டும்
பகலில் பொருந்த முடியாதவர்களையும்
இரவுக்கு தன்னை தயாரித்துக் கொள்கிறவர்களையும்
மது விடுதியிலிருந்து ஆற்றுப்படுத்துகிறது

இளங்குழந்தையின் மிருதுவாய்
நிர்வாண யுவதியின் குழைவாய்
மதுபாட்டில் உள்ளங்கையில் நெகிழும் போது
நிலவு இந்த நகரை முழுவதுமாக
கவ்விக் கொள்கிறது

முதல் மிடறுக்கு
மருத்துவமனை  அல்லது ஆலயத்தை
இரண்டாம் மிடறுக்கு
மனைவியின் சத்தியத்தை
மூன்றாம் மிடறுக்கு
குழந்தைகளின் தேவைகளை
மறக்க வைக்கும் புண்ணிய நதியில்
மூழ்கி எழும் போது
இறைவனுக்கும் மருத்துவனுக்கும்
ஏது இடம்

நினைவின் அழியாத ஒரு புள்ளியிலிருந்து
நிலவின் இழையைப் பற்றிக் கொள்கிறோம்

படுக்கையிலிருந்து எழும் போது
நேற்றைய முன்னிரவுக்கும்
இவ்விளங்காலைக்கும்
இடையே காலம் வெறும் கருப்புத் துண்டாய்
நழுவிப் போயிருக்கிறது

குளிர்ந்த தண்ணீரைத்
தலையில் ஊற்றிக்கொள்ள
புத்தனாய் விளங்க உறுதியேற்கிறோம்

இப்போது பகல் அதன் வாயிலைத் திறந்து
நம்மை உள்ளே அனுமதிக்கிறது.

Monday, December 6, 2010

வடிவேலுவும் தமிழ் பண்பாட்டு மானுடவியலும்

                நகைச்சுவை நடிகர் வடிவேலு உருவாக்கும் பாத்திரங்கள் நம் சமகாலத் தமிழர்களைப் பிரதிபலிப்பதாகவே பெரும்பாலும் அமைந்திருக்கின்றன. நாய் சேகர், வட்டச் செயலாளர் வண்டு முருகன், அலர்ட் ஆறுமுகம், கைப்புள்ள இப்படி அவரது பாத்திரங்களில் என்னையும் இன்னும் தமிழின் ஏன், இந்தியாவின் பல பிரபலங்களையும் அடையாளம் காண்கிறேன். தமிழர்களின் மனசாட்சி என்று கூட வடிவேலைக் கூறலாம். பண்பாட்டு மானுடவியலில் ஆர்வமுள்ளவர்கள் வடிவேலின் நகைச்சுவைச் சித்திரங்களை தீவிரமாக ஆய்வு செய்தால் அதில் செயல்படும் நமது பண்பாட்டு மானுடவியற் கூறுகள் குறித்த அபூர்வமான விஷயங்களை விளங்கிக் கொள்ள முடியும்.


                   இனி பிரபலமான சிலரோடு வடிவேலின் பிரபலமான வசனங்கள் இன்றைய சூழலில் எந்தளவுக்குப் பொருந்துகின்றன... பார்ப்போம்.

கலைஞர் vs ஜெ அறிக்கைகள்

பேச்சு பேச்சா இருக்கனும்
இந்த கோட்டைத் தாண்டி நானும் வரமாட்டேன்
நீயும் வரக்கூடாது

இன்னும் மக்களோடுதான் கூட்டணி எனச் சொல்லும் விஜயகாந்த்

நானும் வலிக்காத மாதிரியே எவ்வளவு நேரம் தான் நடிக்கிறது

மன்மோகன்சிங் & பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார்

வேண்டாம் அழுதுடுவேன்

ஆக்ஸ்போர்டு நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத ராஜபக்சே

வட போச்சே!

பத்திரிகைகளில் நாயைப் பிடித்துக் கொண்டு போஸ் கொடுக்கும் சாருநிவேதிதா

ஏய் சேகர் டேய் சேகர்னு கூப்பிட்டவென்லாம் இப்ப நாய் சேகர்னு மரியாதையா
கூப்பிடுறான்.

ராஜாவைப் பாதுகாக்கும் கி. வீரமணி

அவன் கருப்பா பயங்கரமா இருப்பான்
இவன் பயங்கரமா கருப்பா இருக்கான்

அவ்வப்போது மீடியாக்களில் கிலி கிளப்பும் சுப்ரமணியசாமி

கைப்புள்ள வண்டிய கிளப்பு

ஸ்பெக்ட்ரம் ராஜா

சண்டையில் கிழியாத சட்ட எங்க இருக்கு

ஈழப் பிரச்சினையில் திருமாவளவன்

அது போன வாரம், இது இந்த வாரம்

வன்னியர்களைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கும் டாக்டர் ராமதாசு

திரும்பவும் மொதல்ல இருந்தா

திமுக வை விமர்சிக்க ஆரம்பித்திருக்கும் அ. இ. ச. ம. க தலைவர் சரத்குமார்

நானும் ரவுடிதான்

குடிபோதையில் மூத்த கவிஞர் இளங்கவிஞருக்கு கொடுக்கும் மகாகவி பட்டம்

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளமாக்குராய்ங்களே

இலக்கியவாதிகளை பட்டியல் போடும்  ஜெயமோகன்

இன்னுமாடா இந்த ஊரு நம்மள நம்பிக்கிட்டிருக்கு

நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக்

இவன் அதுக்கு லாயக்கில்ல

தேர்தல் கால வாக்காளர்

அவனவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமாத் தான் இருக்கு

தேர்தலுக்குப் பிறகு வாக்காளர்

எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் இவன் ரொம்ப நல்லவன்டா

வடிவேலின் ஒரு நகைச்சுவைத் துணுக்கு

Sunday, December 5, 2010

டிசம்பர் 06 - நீதிமன்றமா? கட்டப்பஞ்சாயத்துக் கூடமா?

            டிசம்பர் 6. பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள். நமது போலி மதச்சார்பின்மையின் மீது நமக்கிருந்த கடைசி நம்பிக்கையை இந்துத்துவவாதிகள் கடப்பாறை கொண்டு தகர்த்த நாள். இவ்வளவு நாளாய் பாபர் மசூதி இடிப்பு வழக்கை இழுத்தடித்து வந்த நீதிமன்றம் தீர்ப்பு கூறிய போது அது தன் பங்குக்கு ஒரு கடப்பாறையைப் போட்டது. வர வர நீதிமன்றங்கள் கட்டப்பஞ்சாயத்து செய்யுமிடமோ என்கிற ஐயம் ஏற்படுகிறது. ராமர் பாலம், பாபர் மசூதி எல்லாவற்றிற்கும் சான்றாக வெகு மக்கள் நம்பிக்கையை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஆனால் நீதி என்பதும், வெகுமக்கள் நம்பிக்கை என்பதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டது. நீதிமன்றம், மத்திய அரசு, தொல்லியல் துறை, இந்துத்துவா சக்திகள் என எல்லோரும் இந்தத் தீர்ப்பில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். இந்த தீர்ப்புக்கு எதிர்வினையாக இசுலாமியர்களின் மௌனம் கனத்த துயரின் வெளிப்பாடு. இந்துக்களின் மேலாண்மையை இசுலாமியர்கள் அனுசரித்துப் போக வேண்டும் என்பதைத் தான் தமது தீர்ப்பில் நீதி மன்றம் வேறு வேறு வார்த்தைகளில் கூறியிருக்கின்றது. பெரியார், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக்  கொளுத்தச் சொன்னார். அவர் சொன்னதற்கான நியாயங்கள் இன்னும் உயிரோடு இருக்கின்றன. அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது, பாபர் மசூதி இடிப்பு வழக்கு,  பல்வேறு பிரச்சினைகளில் தனியார்மயமாக்கலுக்கு ஆதரவு என நீதிமன்றங்களின் தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானதாகவே இருந்து வருகிறது. சமூக நீதி, மனித உரிமைகள் போன்றவற்றில் அக்கறை உள்ளவர்களுக்கு டிசம்பர் 06 ஒரு கருப்பு தினம். இந்திய வரலாற்றில் கருப்பு தினங்கள் அதிகரித்துக் கொண்டு வருவதைக் கண்டு சனநாயகத்தில் நம்பிக்கை உடையவர்கள் கவலைப்பட வேண்டும். 

Saturday, December 4, 2010

ஒரு வார்த்தை கவிதை ஒன்று

சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் புத்தக வெளியீட்டு விழாவில் பாவலர் அறிவுமதி சொன்ன ஒரு வார்த்தை கவிதை இது.

                                                                     வருவான்

கவிதை புரியுதா?

அரட்டை - ராதா vs கண்ணன்

நான் எழுதிக்கொண்டிருக்கும் புதிய புதினம் “நிர்மலாவைக் கடப்பது”.  இதில் ராதா, கண்ணன் என இரண்டு பாத்திரங்கள் இடையிடையே வந்து நாவலில் வரும் பாத்திரங்கள் பற்றியும் சமூகம், கலை, அரசியல் நிகழ்வுகள் பற்றியும் பேசிக் கொள்வார்கள். இனி அவ்வவப்போது இவ்வலைப்பூவில் இவர்களின் அரட்டையைக் கேட்கலாம். (நிர்மலாவைக் கடப்பது சிக்கிமுக்கி இணைய இதழி்ல் www. chikkymukki.com தொடராக வருகிறது.)


ராதா : ஏய் அன்னைக்கு இஞ்சி, லெமன் எல்லாம் போட்டு ஒரு ஜுஸ் குடுத்தியே ரொம்ப         நல்லா இருந்துதுடா....வெளியில எங்க கண்ணா அது கிடைக்கும்.

கண்ணன்:  ஓ.. எல்லா டாஸ்மாக்குலயும் கிடைக்குமே!



ராதா : u cheat... ஏய் அன்னைக்கு என்னதான் குடுத்தே.
கண்ணன்: அது மேஜிக் மொமன்ட்ஸ் ன்னு வோட்கா ராதா. அன்னைக்கு நீ குரங்கு மாதிரி எப்படி எல்லாம் குட்டி கரணம் அடிச்ச தெரியுமா?



ராதா : ஓங்கூட பேசவே கூடாதுடா.. கோ டு ஹெல்.
கண்ணன்: சரி விடு ராதா... மழை எப்படி கொட்டி தீக்குது பாத்தியா!



ராதா : அதை விடு... சேனல் 4 பார்த்தியா ஈழப் போரில் சிங்கள ராணுவம் புரிந்த அக்கிரமத்தை பார்த்து உலகமே திகைச்சிப் போச்சே
கண்ணன்: ஆமாம்பா, ஐ.நாவின் சிறப்புத் தூதர் கிறிஸ்டோபர் ஹேன்ஸ் கூட இந்த கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்னு சொல்லிருக்காரு.



ராதா : ஆக்ஸ்போர்டு நிகழ்ச்சியையே ரத்து செய்யிற அளவுக்கு உலகத் தமிழர்களின் எதிர்ப்பைப் பார்த்தியா? என்ன புண்ணியம், இங்க ராஜப்க்சேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு.
கண்ணன்: அசிங்கப்பட்டு ஊர் வந்தா போதும்னு ஓடி வந்துட்டாரே.



ராதா : ஸ்பெக்ட்ரம் பிரச்சினை பூதாகரமா ஆவுதே கவுனிச்சியா? ஆமாம், கவுனிச்சேன் நிரா ராடியா 50 ப்ளஸ்லயும் சும்மா கும்முன்னு இருக்காங்கல்ல.



ராதா : ஒன்ன திருத்தவே முடியாது. அவுங்க பவர் புரோக்கர்ங்கறது தெரியும். இந்த டேப் விவகாரத்துல பத்திரிகை அறம் பேசுற ஆட்களோட வேஷம் கலஞ்சிருக்கு பாத்தியா?
கண்ணன்: நம்ம ஆட்களுக்கு இங்லீஷ் மீடியான்னாலே ஒரு கவர்ச்சிதான். நீ யார சொல்ற



ராதா :  டி. வி மீடியாவுல மிரட்டிக்கிட்டிருக்கிற பர்கா தத்தும், மத்திய அரசுக்கு சாதகமா எழுதிகிட்டிருக்கிற வீர் சங்கவியையும் தான் சொல்றேன். 

கண்ணன்:மீடியா அதிகாரத்த வெச்சிகிட்டு பவர் புரோக்கரா மாறுவது ஒண்ணும் புதுசு இல்லையே. இங்க 'சோ' ல்லாம் இது மாதிரி ஆள் தானே.



ராதா :  விக்கி லீக்ஸ் ரகசியங்கள் பத்திகிட்டு எரியுதே.
கண்ணன்: விடு, அமெரிக்கா அம்பலப்படட்டும்

ராதா : ஸ்பெக்ட்ரம்..

கண்ணன்: வேணாம், விட்டுடு.. நான் திராவிடன்.



ராதா :  இல்லப்பா, இதுல காட்டுற ஆர்வத்த போபால் விஷவாயுப் பிரச்சினை, வடகிழக்கு மாநில காடுகளை கனிமங்களை எடுக்க வேதாந்தா மாதிரி கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கறதுல அரசாங்கம் காட்டுற வேகம்.. இதபத்தியெல்லாம் பேசமாட்டேங்குறாங்களே
கண்ணன்: சரி.. கூல் டவுன். விஜய் அரசியலுக்கு வரப்போறாராமே



ராதா :  அதுக்குள்ளயா பீல்டவுட் ஆயிட்டாரு?
கண்ணன்: எல்லாம் ஒரு பாதுகாப்புக்குத் தான். ஏய், அன்னைக்கு நீ என்னன்னல்லாம் செஞ்ச தெரியுமா? இன்னைக்கும் இஞ்சி சாறு பிழிஞ்சி எலுமிச்சை எசன்ஸ் போட்டு ஜுஸ் வேணுமா?



ராதா :  u bleady bitch..

Friday, December 3, 2010

எதிர்பார்ப்பிற்குறிய நூல்கள் - சென்னை புத்தக கண்காட்சி - 2011

இப்பகுதியில் வரும் புத்தக கண்காட்சியை ஒட்டி வெளியாக உள்ள, எனது கவனத்திற்கு வந்த சில நூல்களைப் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இலக்குமி குமாரன் ஞானதிரவியத்தின் “ஆம் எனும் கிணறு” - சிறுகதைத் தொகுப்பு

90 களின் தொடக்கத்திலிருந்து கவிதைத் துறையில் இயங்கி வருபவர் இலக்குமி குமாரன் ஞானதிரவியம். சுஜாதாவின் Good book ல் இடம்பிடித்தவர். இவரது “என்பதாயிருக்கிறது” தமிழின் சிறந்த கவிதைத் தொகுப்புகளுள் ஒன்று. கவிஞராக அறியப்பட்ட ஞானதிரவியத்தின்' அகஒட்டு' நாவலைப் படித்துவிட்டு திகைத்துப் போனேன். அத்திவெட்டி எனும் கிராமம் சார்ந்த கள்ளர் இனக்குழுவைப் பற்றிய ஒரு காத்திரமான பதிவு இது. கிராமங்களில் நிகழும் சாதிப் பஞ்சாயத்தின் மூர்க்கத்தைப் பேசுகிறது இப்புதினம். உலக மயமாக்கலின் பாதிப்புகளை மீறியும் இன்னும் நம் நிலப் பிரபுத்துவ குரூரங்கள் அழிந்துவிடவில்லை என்பதை வெளிப்படுத்தும் படைப்பு. இப்புதினம் ஞானதிரவியத்தின் புனைகதைத் திறமையை வெளிப்படுத்தியது.

சமீபத்தில் இவரது “ஆம் எனும் கிணறு” சிறுகதைத் தொகுப்பின் மெய்திருத்தப் பதிப்பை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பல இடங்களில் சிரிப்பை அடக்க முடியவில்லை. மிகுந்த ஹாஸ்ய உணர்வைத் தூண்டுவதாக இத்தொகுப்பின் கதைகள் அமைந்திருக்கின்றன. அதே வேளையில் இடதுசாரி பின்புலம் கொண்ட இவரது அரசியல் சார்பும் இக்கதைகளில் வெளிப்படுகிறது. அழிந்து வரும் கிராமிய மதிப்பீடுகளை பற்றி பேசும் இக்கதைகள் வரும் புத்தகச் சந்தைக்கு அன்னம் வெளியீடாக வரவுள்ளது. சிறுகதை விரும்பிகள் தவறவிடக்கூடாத நல்ல தொகுப்பு.

Thursday, December 2, 2010

அருந்ததி ராய்க்கு ஆதரவாக நிற்போம்.

                 பல்வேறு தேசிய இனங்களின் சுயத்தை அழித்து ஊதிப் பெருத்ததுதான் இந்திய பெருந்தேசியம். காஷ்மீரையும் இப்படித்தான் கபளீகரம் செய்தது. காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்துவோம்  என்கிற நேருவின் உறுதிமொழி காற்றில் பறக்க விடப்பட்டது.
                       காஷ்மீரிகள் ஒரு தேசிய இனம். காஷ்மீர் தனி நாடு. அது இந்தியாவுக்கோ பாகிஸ்தானுக்கோ சொந்தமானதில்லை. அது காஷ்மீரிகளின் தேசம். இதைத்தான் அருந்ததி ராய் சொல்கிறார். வழக்கம் போல நமது தேச பக்தர்கள் சாமியாடத் தொடங்கிவிட்டார்கள். உச்ச நீதிமன்றம் அவர் மீது வழக்கு பதியக் கோரியிருக்கிறது. அமெரிக்கா, பாபர் மசூதி, மோடி, மாவோயிஸ்ட் என எல்லா அரசியல் நிகழ்வுகள் குறித்தும் சிறிதும் அஞ்சாமல் கருத்து சுதந்திரத்துடன் இயங்கி வருகிறார் அருந்ததி ராய். இந்த அறச்சீற்றமும், போர்க் குணமும் எல்லா எழுத்தாளர்களுக்கும் வேண்டும். அருந்ததி ராய் கைது செய்யப்பட்டால் அது கருத்து சுதந்திரத்தின் மீது படிந்த தீமையின் நிழல். அவருக்கு ஆதரவாக இந்தியா முழுமையும் உள்ள எழுத்தாளர்கள் அனைவரும் இணைந்து நிற்போம்.

வா. மணிகண்டன் - புதிய கவி உலகு

புத்தாயிரம் வழங்கிய கவிஞர்களில் வா.மணிகண்டனும் குறிப்பிடத் தகுந்தவர். 
சமகால இளைஞர்களின் மன ஒட்டங்களை அறிந்து கொள்வதற்கு இவரது 
கவிதைகள் உதவுகின்றன. நேரடித் தன்மையுடையதைப் போன்று பாவிக்கும் 
இவரது கவிதைகள் அதன் இயல்பான எளிமையை மீறியும் இளைஞர்களின் 
சிக்கல் மிகுந்த அக உலகை குறியீடான சம்பவங்களின் வாயிலாகக் காட்டிச் செல்கின்றன.
இவரது “கண்ணாடியில் நகரும் வெயில்” தொகுப்பை கவிதை ஆர்வலர்கள் வாசிக்கலாம். 
 
ஏணிக‌ளை வ‌ரிசையாக‌க் க‌ட்டி
அருவி மீது ஏற‌ முய‌ன்றேன்
கீழே விழுந்தால்
எலும்பும் மிஞ்சாது என்று
தாயுமான‌வ‌ன் சொன்னான்.

உச்சியை அடையும் க‌ண‌ம்
விழ‌த்துவ‌ங்கினேன்.

எப்ப‌டி
எலும்பு மிஞ்சிய‌து என்றும்
இலை
சுழ‌ன்று
விழும்
தேவ‌த‌ச்ச‌ன் க‌விதையையும்
யோசித்துக் கொண்டிருந்தேன்.

இட்லி வாங்கி வ‌ர‌ச் செல்வ‌தாக‌
தாயுமான‌வ‌ன்
கிள‌ம்பிச் சென்றான்.


===
 
ஓய்வெடுக்கும் கடவுள்

முடிந்த பகலின் எச்சங்கள் 
சிதறிக்கிடக்கும்
இந்த இரவில்
உறிஞ்ச வேண்டிய சிகரெட் ஒன்று மிச்சமிருக்கிற‌து.
குப்பியில் தீராமலிருக்கிறது கொஞ்சம் மது.
நீங்கள்இரவொன்றை கொண்டாடாமல் கழிக்கிறீர்கள்.
கணமொன்றை விசனத்தில் தீர்க்கிறீர்கள்.
வினாடியின் நீட்சியை கவலையில் தோய்க்கிறீர்கள்.
நானோ
தன் சூட்சுமங்களை
ஆணியில் அறைந்து
ஓய்வெடுக்கும்
கடவுளாகிறேன்.

மழையின் உற்சாகம் கரைந்து கொண்டிருக்கும்
வெளியில்-
பிளாஸ்டிக் பாட்டிலில்
அடைத்துக் குலுக்கிய
நீராக தத்தளிக்கிறது.

நீங்கள் எது என்பீர்கள்
நான் தெரியாது என்பேன்.
 
ஒரு துப்பாக்கியின் பெய‌ர்

கெளசிக்
துப்பாக்கி வாங்கியிருப்பதாகச்
சொன்னான்
இஸ்ரேலியத் தயாரிப்பான
அது
சமயத்தில் நூற்றியிருபது குண்டுகளை
தேக்கிக் கொள்ளும்.
வினாடிக்கு
740 மீட்டர் வேகத்தில்
குண்டு சீறும்.
மொத்த எடை
3100 கிராம்.
ஸ்ரீலதாவின் குடும்பத்தை
தீர்க்கப் போகிறானாம்.
சிரித்தேன்.
'நீ_______' என்றான்.
அவன் சொன்னானா
நான் மறந்தேனா 
என்பதில் பிரச்சினையில்லை.
இப்பொழுது
துப்பாக்கியின்
பெயர்
நினைவில் இல்லை.

பா. செயப்பிரகாசம் வேண்டுகோள்

அன்புடையீர்,வணக்கம்.
"மஹிந்த அரசின் போர்க்குற்றங்கள் -சேனல் -4   வெளியிட்ட அத்ர்ச்சிக் காணொளி "
என்ற தலைப்பில் பொங்குதமிழ் இணையம்   ponguthamizh.com இப்போது வெளியிட்டுள்ள காணொளியை  உடனே காணுங்கள் . மஹிந்த லண்டனுக்கு வருகை தந்துள்ள இந்நாளில் அது வெளியிடப் பட்டுள்ளது
பா.செயப்பிரகாசம் .