Monday, November 29, 2010

மரணமும் கவிதையும் - சி. மணியை முன்வைத்து

கவிஞனின் சொற்கள் கலையாகவும், கலை ஆவணமாகவும் சமூகத்திற்குள் உறைந்துவிட்ட பிறகு, சமூகத்தின் பொது வெளியிலிருந்து மரணத்தால் அவன் உடலை மட்டும்தன் காணாமல் போகச்செய்ய முடிகிறது.
மரணம் என்பது மீண்டும் மீண்டும் கவிஞர்களின் உடலை மறைத்து வைக்கிற கடவுளின் சிறுபிள்ளை விளையாட்டு.
 சராசரி மனிதர்களுக்கு மரணம் என்பது அச்சத்தின் திரைக்கு அப்பால் இருக்கிற மர்மமும், திகிலும் நிறைந்த இருள்வெளி.  அதிகாரத்திற்கெதிராக சதா சமர் புரிந்துகொண்டிருக்கும் கவிஞனுக்கோ மரணம் ஒரு பரிசு.  அது சுவை மிகுந்த கனி.
 மரணத்திற்குப்பின் கவிஞன் உடல் ஒரு தாவரத்திற்கு எருவாகும் வேளையில் அவ்னது கவிதைகளோ  பிரபஞ்சத்தின் விழிக்கு ஒளியாகிச் சுடர்விடுகிறது.
 கவிஞனின் மரணம் குறித்து இப்படி மிகையாகச் சிந்திப்பது மரணம் பற்றிய நடுக்கங்களிலிருந்து நம்மை (அல்லது) என்னைக் காப்பாற்றிக்கொள்ளும் சக்தியை அளிப்பதாக இருக்கிறது.
 மரணத்தைக் கண்ணோடு கண்கொண்டு பார்த்த பாரதியிலிருந்து இன்று அப்பாஸ், சி.மணி வரையிலான ஒவ்வொரு கவிஞர்களின் இழப்பிற்குப்பின்னும் மரணம் கவிஞர்களுக்குப் பழக்கமானதும், தவிர்க்கமுடியாததாகிவிட்டது.  அது நாம் ஒவ்வொருவரும் எழுதியே ஆகவேண்டிய இறுதியான, உன்னதமான கவிதை.
 கவிஞனின் மரணம் ஓர் உன்னதமான கவிதை என்றால் அது அவன் பிரிந்து சென்றிருக்கும் மனைவிக்கும், குழந்தைக்கும் மட்டுமல்லாமல் இந்தச்சமூகத்திற்கும் வாசிக்க உவப்பானதா?  எனும் கேள்வியும் நமக்குள் எழுகிறது.
 கவிஞனின் இருப்பு என்பது அவனது மனைவிக்கு, குழந்தைக்கு மற்றும் இந்தச் சமூகத்திற்கு மட்டுமல்லாமல் கடவுளுக்கும்கூட ஒரு இடையூறாக தொந்தரவாகவே இருந்து வந்திருக்கிறது.  அதே வேளையில், தவிர்க்க இயலாததாகவும் இருப்பதுதான் ஆச்சர்யமானது.
 சர்க்கரை நோயாளிகளின் உள்ளங்கையில் இருக்கிற இனிப்பு பதார்த்தத்தைப் போல, குற்றவாளிகளுக்கு முன்னால் ஆடிக்கொண்டிருக்கும் தூக்குக்கயிற்றைப் போல குருடனுக்குப் பரிசாகக் கிடைத்த ஓவியத்தைப் போல, சாத்தானின் கையிலிருக்கிற வேதபுத்தகத்தைப் போலத்தான் இச்சமூகத்தில் கவிஞனின் அவசியமும் இருந்து வருகிறது.
 அவன் விழுங்கமுடியாத அமுதம்.  துப்ப முடியாத விஷம்
 இசைவின்மை எனும் நாள்பட்ட நோயுடனும், விடுதலையின் மீதான ஒருதலைக் காதலோடும் செத்துமடிந்துவிட்ட கவிஞர்களின் ஆவி பீடிக்கப்பட்ட சொற்களை மதிக்கும் சமூகத்தின் களஞ்சியங்கள் தானியங்களாலும், தங்க நாணயங்களாலும் நிரம்பும், அவர்களது சோற்றுப்பானைகள் ஒருபோதும் உலர்வதில்லை. அங்கு போரும், வன்முறையும் இல்லை, காதலும் மகிழ்ச்சியும் நிரம்பியிருக்கும் என நற்செய்திகளைக்கொண்டு வரும் தேவதை ஒருத்தி தூக்கமற்ற பொழுதில் காதில் ரகசியமாய்ச் சொல்லிச் சென்றாள்.  அதை ஒரு வதந்தியைப் போன்றோ, புராணிக நம்பிக்கையைப் போன்றோ, சமூகத்தில் ப்ரப்பும்படி வேண்டிக்கொண்டதை இப்போது உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
 
*****
 ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்துப் பசியைப் போக்கிவிடலாம்.  சாராகயக் கடைகளைத் திறந்தும், வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிகளை இலவசமாய்க் கொடுத்தும் மக்களை சந்தோஷப்படுத்தலாம்.  கருப்புச் சட்டங்களின் மூலம் வன்முறையை, தீவிரவாதத்தை ஒழித்துவிடலாம் எனும் எளிமையான சமன்பாடுகளும், தீர்வுகளும் அரசாங்கத்திடம் இருக்கிறது.
 நோய்களைத் தீர்க்கவும், கணவன் மனைவியிடையே உறவைச் செழிக்கவைக்கவும், அரசாங்கம் கவிழ்ந்துவிடாமல் உதவவும் கூட மதத்தலைவர்களிடம் நிவாரணங்கள் இருக்கின்றன.
இந்த அளவிற்கு அமைதியாக, பிரச்சினையில்லாமல் இத்தேசத்தில் மாந்தரெல்லாம் வாழும் வேளையில் ஏனிந்த வாழ்வென்னும் வளர் குழப்பம் எனத் தொடங்கும் சி. மணியின் கவிதை உருவாக்கும் பதற்றத்தை யார்தான் விரும்புவார்?  நிலவுகிற அமைதி, சமாதானம், மகிழ்ச்சி அனைத்தும் பொய்யானது புஐயப்பட்டது எனத் தெரிந்தும் பாவனைகளையே வாழ்முறையாகக் கொண்டவர்கள், நோயை ரசிக்கக் கற்றவர்கள், அடிமைத்தனத்திற்குப் பழகிக்கொண்டவர்கள் குழப்பத்தை ஒருபோதும் விரும்புவதில்லை.
 சமூகத்தில் நிலவும் பேதங்கள், ஏவப்படும் வன்முறைகள், இயற்கையை, சாதாரண மனிதர்களைக் காவுகொண்டு கட்டியமைக்கப்படு அரசியல் பொருளாதார நடவடிக்கைகள் இவற்றைச் சிந்திக்கையில்தான் குழப்பம் எழும். எது வளர் குழப்பமாகும்,  வளர்குழப்பம்தான் கலகமனமாக பரிணாமம் கொள்கிறது.  அதிகாரமும் குழப்பமும் எதிரெதிரானது.  கலக்கத்தை விதைக்கும் கவிஞனை இதனால்தான் அதிகாரச் சமூகத்தால் சகித்துக்கொள்ள முடிவதில்லை.
 அறுபதுகளில் தொடங்கி சற்றேரக்குறைய அரை நூற்றாண்டுக் காலம் தன் வாழ்வின் பெரும் பகுதியை இலக்கியத்திற்காக அர்பணித்துக்கொண்ட சி. மணியின் கவிவாழ்வு முக்கியத்துவம் உடையது.  நாம் கொண்டாடக்கூடிய அளவிற்குப் பெருமை படைத்தது.  வெட்டவெளி இது/ அறை அல்ல / என சில கணம் துள்ளியது என்மனம்/ மேற்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர்/ தெற்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர் / வடக்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர் / கிழக்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர் / எழும்பிக்குதித்தேன் இடித்தது கூரை’  என இவ்வமைப்பையும், நமது அடிமைத் தனத்தையும் விமர்சனப்படுத்தும் பார்வைகளை அளிக்கவல்லவை சி.மணியின் கவிதைகள்.  60 களின் கவிதை அழகியலைக் கடந்து தமிழ்க்கவிதை உலகம் இன்று எங்கோ முன்னேறி வந்திருக்கிறாது.  இருந்த போதும், விடுதலைய விழையும் சி. மணியின் நவீன மனம்தான் அவரது கவிதைகள் மீது நமக்கு ஈர்ப்பை ஏற்படுத்துகிறது
 ஆங்கிலக் கல்வி அளித்த நவீன நோக்கும் சங்க இலக்கியம் மற்றும் தமிழ் இலக்கணப் பரிச்சியமும் உடைய தமிழ் மரபின் தொடர்ச்சியும் இணைந்து உருவான கூட்டுவிளைவுகள் தாம் சி. மணியின் கவிதைகள். கலித்தொகை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து சில பிரயோகங்களை தனது கவிதைகளுடன் அவர் நேரடியாக இணைக்கும் போது அவை புதிய வண்ணத்தில் மிளிரக் கூடிய அழகை நம்மால் கண்டு கொள்ள முடிகிறது. தாவோ, ஜென், சூஃப், ஜெ.கிரு நமூர்த்தி எனத் தத்துவ தேடல் கொண்டிருந்த இரவது கவிதைகள் அவற்றின் சாரத்தையும், சத்தையும் தம்முள் செரித்துக்கொண்டிருப்பதையும் நம்மால் அவதானிக்க முடிகிறது.
காமம், காதல், அநித்யம், மரணம், பொருந்தாமை, இயற்கை, அன்பிற்கான விழைவு, ஏக்கம், குரோதம், பழி, வெறுமை, சலிப்பு, நம்பிக்கையின்மை, எதிர்ப்பு, போர்க்குணம் என விரிவான பாடுபொருள்களைக் கொண்டு அரைநூற்றாண்டுகள் தொடர்ந்து கவிதை எழுதுவதற்கு மூர்கமான இலக்கியப் பசி வேண்டும். எழுதி, எழுதி நிறைவடையாத, சோர்வடையாத திடம் கொண்ட கலை மனம் வேண்டும். சி. மணிக்கு அவை வாய்க்கப் பெற்றிருந்தது.
கவிதைகளில் சொற்கள் என்பவை அர்த்தங்கள் புதையுண்டிருக்கும் கல்லறைகளல்ல, திசையெங்கும் நறுமணத்தை கமழச் செய்யும் மலர்களையும், சத்தும் சாறும் மிகு கனிகளையும் கொண்டிருக்கும் விதைகள் அவை. கவிதையை நாள்தோறும் உயிர்த்திருக்கவும், உயிர்ப்பிக்கவும் கூடிய இயற்கை விளைவாக மாற்றும் ஆற்றலால்தான் கவிஞன் ஆகிருதி கவனம் பெறுகிறது. சி. மணியின் கவிதைகள் காலம் தோறும் இயங்கிக்கொண்டிருக்கும் உயிரோட்டமுடையவை. தொடர்ந்து தம்மை புதுப்பித்துக்கொண்டு தன்னுடைய புதிய வாசகனுக்கு இளமையான அனுபவத்தைத் தரக்கூடிய ஆற்றலைக் கொண்டவை. ஒவ்வொரு கவிதையையும் புதிதாகச் சொல்லிப்பார்க்கும் அவரது பெரு விருப்பை, வடிவங்களில் கொள்ளும் பரிசோதனைப் பேரார்வத்தை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம்.
கவிஞனுக்கும் அனுபவத்துக்கும், கவிஞனுக்கும் அகத் தேட்டத்துக்கும், கவிஞனுக்கும் லட்சியத்திற்குமான வினைகளிலிருந்து தோன்றும் கவிதையில் சொற்களின் பங்கு மகத்தானது. இந்த உலகில் சொற்களாக்கப்படாத அனுபவங்களும், பொருட்களும் இருக்கவே செய்கின்றன. இந்நிலையில் கவிஞனின் கவிதை சொற்களோடு மெளனங்களையும் சேர்த்துக்கொண்டு தனது அர்த்தத்தை நிரப்பிக்கொள்ளும் தவிப்போடு இருப்பதை கவிதையின் உயிர்ப்பு எனக்கொள்ளலாம் திறப்புகளையும், அவனது வாசிப்பு தன்னை ஒரு புதிய கவிதையாக மாற்ற வேண்டும் என்கிற தவிப்பையும் கொண்டிருக்கி
’முடிவற்ற முறைகளில் முழுமையாக்கப்படக்கூடிய ஆனால் என்றைக்குமே முழுமையடையாத கவிதையையும் அதன் சொற்கள் பொருந்து முறைகளையும் தேடிக்கொண்டே இருப்பது கவிஞன் வேலை’ என பால் வெலரி சொல்வது போல தேடிக்கொண்டே இருந்தவர்தான் சி. மணி.
கவிதைத் துறையைக் கடந்து மொழிபெயர்ப்பு அகராதியியல் போன்ற துறைகளிலும் இவர் இயங்கி இருப்பது குறிப்பிடத்தகுந்தது. அமெரிக்கத் தமிழறிஞர் பேராசிரியர் ஹெரால்டு  ஃப்மனுடன் இணைந்து தமிழ்வினைச்சொல் அகராதியை உருவாக்குவதிலும், க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி உருவாக்குவதிலும் இவருடைய பங்களிப்பு முக்கியத்துவம் மிக்கதும் பராட்டப்படக்கூடியதும் ஆகும்.
ஒரு கோப்பை மது அருந்தியதற்குப் பின் நம் அருகில் வந்து அமர்ந்துகொள்ளும் இறந்துபோன எந்தவொரு தேசத்து மகாக்வியைப் போலவும் சி. மணி நம் அருகில் வந்து அமர்ந்துகொள்ளக்கூடியவர்தான்.
கனிந்த அவரது மரணத்தின் நிழலில் அவரது நினைவைக் கொண்டாடும் பொருட்டு பியர் அருந்தத் தொடங்கினேன். அப்போது என் தோள் மீது கைபோட்டு சி. மணி கவிதை சொன்னார்.

    ’இலக்கிய வழியில் நிரந்தரம் கிடைக்கும்
    கலைகள் கொண்டு அறிவினைக் கொண்டு
    அறமும், அன்பும் கொண்டு மனிதன்
    சாவைச் சுடுகாட்டில் எரித்துவிட முடியும்’

எனது மதுக்குவளை காலியாகிவிட்டது. அப்பாசும், சி. மணியும் சாவைச் சுடுகாட்டில் எரித்திருக்கிறார்கள். நாமும் கூட எரிக்கலாம். அதுவரை இன்னமும்கூட நமக்குக் கவிதைத் தேவைப்படுகிறது.

No comments:

Post a Comment