Monday, November 29, 2010

நிலாவை வரைபவன் - ஒரு கதையின் கதை

கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த எனக்கு புதினம் எழுதும் ஆசை எப்படி வந்தது எனக் கேட்டால் சரியாகப் பதில் சொல்லத் தெரியவில்லை. நமது மனதின் இயக்கம் ரகசியமாகவும், மர்மமாகவும் இருக்கிறது. மனசுக்குள் ஏதோ ஒரு சன்னல் திறந்ததுபோல் இருந்தது. அருகில் தெரிந்த காட்சிகள் தெளிவாகவும், சற்று தூரத்தில் தெரிந்த காட்சிகள் தெளிவற்றும் மங்கலானதாகவும் விளங்கியது. இந்த சன்னல் திறந்தும் மூடியும் விளையாட்டுக்காட்டிக் கொண்டிருந்தது. சன்னலூடாகத் தெரிந்த காட்சிகளில் ஒருவித கனவுத் தன்மையும், தொடர்ச்சியும் காணப்பட்டது. அந்த சன்னலுக்கு அப்பால் நானும் எனக்கு நெருங்கியவர்களுமே இயங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதை அனுமானிக்க முடிந்தது. இந்த விளையாட்டு எனக்குள் நிகழ்ந்து கொண்டிருந்த தருணத்தில் தான் பாலகுரு (மருதா) கேட்டார், ' நீங்க ஏன் நாவல் எழுதக்கூடாது?' நான் எனது சன்னல்களின் கதவுகளை நீக்கி விட்டேன். ' நிலாவை வரைபவன்' வளரத் தொடங்கியது.

முதலில் கவிதை எழுதுவதற்கும் புதினம் எழுதுவதற்கும் உள்ள வித்யாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். புதினம் கனி என்றால் கவிதை சாறு. புதினம் தேன் கூடென்றால் கவிதை தேன். கவிதை கிரிக்கெட் விளையாட்டின் மிஞ்சிய டருணங்களை (highlights) மட்டும் காட்டுகிறது. புதினமோ முழு கிரிக்கட் போட்டியையும் காட்டுகிறது. காலம், வெளி இவற்ரின் நீண்ட பாதையில் பயணிக்கிறது புதினம். கவிதையில் தொடக்கம் முடிவு எல்லாம் வெறும் புள்ளிகள் தாம். பாதை கற்பனையில் வளர்கிறது.

நான் கவிதையின் குணத்தையும் புதினத்தின் குணத்தையும் இணைத்து இந்தப் புனைவை உருவாக்கத் திட்டமிட்டேன். இந்தப் புனைவை உருவாக்குவதற்கு முன்மாதிரியாக காப்காவின் 'உருமாற்றத்தை' மனதுக்குள் வரித்துக்கொண்டிருந்தேன். ஆனால் புதினத்தின் கட்டுமானம், வடிவமைப்பு, மொழிநடை என முற்றிலும் புதியதொரு படைப்பைத் தான் தமிழ் இலக்கியத்திற்கு வழங்கியிருக்கிறேன்.

நிலாவை வரைபவன் ஒரு குடும்பத்தின் வாயிலாக நவீன தமிழ்/இந்திய குடும்ப அமைப்பை, சமூக அமைப்பை விளக்க வைக்கிற முயற்சி. இல்லறம், தாம்பத்யம் போன்ற சொல்லாடல்களைச் சுற்றி உருவாகியிருக்கின்ற மதிபீடுகளின் இறுக்கம் நமது குடும்ப உறவுகளில் போலித்தனத்தை தோற்றுவித்திருக்கின்றன. இத்தகைய மதிப்பீடுகளுக்கு இயைந்து போகவும் முடியாமல், மீறவும் முடியாமல் ஏற்படுகிற மன அழுத்தமும், அது குடும்பத்தில் விளைவிக்கிற சீர்குலைவுகளையும் இபுதினத்தின் மையப்பாத்திரமான எக்சுக்கும் அவனது மனைவிக்கும் இடையே உருவாகிற நிகழ்வுகளின் மூலம் நம்மால் வாங்கிக்கொள்ள முடியும். குடும்ப அமைப்பு காதலாலும் சனநாயகப் பண்பினாலும்தான் வலுப்பெற முடியுமே அன்றி வெறும் விழிகளால் அன்று என்பதை இவர்களின் வாழ்க்கை நமக்குக் காட்டுகிறது. அன்பு ஒரு நிபந்தனையாக மாற முடியாது, மாறக்கூடாது. அப்படி மாறுகிற போது வன்முறையாகி விடுகிறது. இத்தகைய வன்முறைக்கு இலக்கானவர்கள்தாம் எக்சும் அவனது மனைவியும். கணவன் மனைவிக்கிடையே எழுகின்ற முரபாடுகள் பிள்ளைகளிடமும் கடுமையான உளவியல் சிக்கல்களைத் தோற்றுவித்து விடுகின்றன. குடும்ப அமைப்பின் மீதான விவாதம் என்பது இப்புதினத்தின் மையப்புள்ளிகளுள் ஒன்று என்றாலும் இன்னும் இது பல உள்ளடுக்குகளையும் கொண்டிருக்கிறது.

குறிப்பாக இது காட்டும் குழத்தைகள் உலகம் தமிழுக்கு மிகவும் புதியது குழந்தைகளின் கற்பனை ஆற்றல், சுதந்திர விழைவு, நமது கல்வி முறை அனைத்தையும் கதையின் ஊடாக ஃபாண்டசி தொனியில் விவரிக்கிறது இப்புனைவு.

குடும்பத்தை விட்டு எக்ஸ் வெளியேறுவது. இப்புனைவின் முடிவு. கதை தொடங்குவதும் அவன் வெளியேறுவதிலிருந்துதான். கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் ஒட்டி அருகருகில் இணைத்துப் பின் நவீனத்துவ முறையில் இப்புனைவு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எங்களுடைய கதையின் ஒரு இழையை கதைசொல்லி சொல்கிறார் என்றால் மற்றொரு இழையை விடுதியொன்றில் வாழும் லெஸ்பியன் தோழிகல் நகர்திச் செல்கின்றன.

எனது புதினத்தைப்பற்றி நானே வியந்து தொடர்ந்து எழுதிச் சொல்ல கூச்சமாக இருக்கிறது. இதை முற்றிலும் பரிட்சார்த்தமாக எழுதிப்பார்த்தேன். இன்னும் சொல்லப்போனால் எனது ரசனைக்குறிய வாசிப்பு முறையை திருப்திப்படுத்த வேண்டும் எனும் நோக்கில் எழுதினேன். இந்தப் புதினத்தை மேய்ப்பு திருத்த மறுத்த பாலகுரு நண்பரும் எழுத்தாளருமான ரமேஷ் பிரேதனிடம் கொடுத்திருந்தார். ஒரு நள்ளிரவில் ரமேஷ், என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இப்புதினத்தை கொண்டாடி வெகுநேரம் பேசினார். அந்தவாந் தெ-எக்சுபெரி, இடாலோ கால்வினோ, பாவ்லோ கொய்லோ போன்றோருடன் ஒப்பிட்டுப் பேசினார். அன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை. ரமேஷின் பெருந்தன்மை இன்று தமிழ்ச்சூழலில் குறைவு, புதினம் வெளியாகி பெருந்தாக்கத்தை ஏற்படுத்தும் என ரமேஷ் பாலகுரு போன்றோர்கள் நம்பினர். வழக்கம் போல் கனத்த மெளனம் தான் எதிர்வினையாக அமைந்தது. பஞ்சாங்கம், அஜயன் பாலா, இலக்குமி குமாரன், ஞானதிரவியம் போன்றோர் உயிர் எழுத்து, இந்தியாடுடே,புத்தகம் பேசுது, போன்ற இதழ்களில் பாராட்டி எழுதியிருந்தனர். நண்பர் முருகேசபாண்டியனும் கடந்த பத்து ஆண்டுகளில் வந்த புதினங்களில் கவனத்திற்குறியதாக காலச்சுவட்டில் கூறியிருந்தார். உயிர் எழுத்து சுதீர் செந்திலும் கூட சிலாகித்துப் பேசினார். பாராட்ட வெண்டும் என்பது கூட எனது விருப்பமில்லை. இது சரியில்லை என்றாவது ஒரு புதிய முயற்சி பற்றி கருத்துத் தெரிவிக்க வேண்டும் எனவிரும்புகிறேன். அவ்வகையில் நண்பர் ரவி சுப்ரமணியன் படித்துவிட்டு, 'என்னால் இரண்டு பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை, குமட்டிக்கொண்டு வருகிறது' என்றார். அவருடைய நேர்மை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

நிலாவை வரைபவன் புத்தகத்தில் இப்புதினம் குறித்த ஒரு குறிப்பு வருகிறது. ஓரள்வு அது இப்புதினத்தைச் சரியாகச் சொல்ல முயன்றிருக்கிறது. அதைச் சொல்லிவிட்டு அவையடக்கத்தின் காரணமாக விடைப்பெற்றுக் கொள்கிறேன்.
'சமகால வாழ்வு அளிக்கும் நெருக்கடிகளையும் அதன் விளைவாக நிகழும் மனச்சிதைவுகளையும் நவீனத்தொனியில் விவாதிக்கிறது, 'நிலாவை விரைபவன் புதினம். மனித உறவுகளில் ஆழ்ந்த தாக்கங்களை ஏற்படுத்தும் மதிப்பீடுகளை மீறத்துடிக்கும் அகவிழைவும் அவ்வாறு மீறயியலாத வகையில் அம்மதிப்பீடுகளின் வழி உருவாகியிருக்கும் புறக்கட்டுப்பாடுகளும் மனித மனதில் நிகழ்ந்தும் சமன் குலைவை நுட்பமாகச் சித்தரிக்கிறது இப்புதினம்.

கவித்துவச் செறிவும், தத்துவவிசாரணையும், புதுமைத் தேட்டமும் உடைய இந்த நாவலை வாசிக்க உங்களுக்கு நான் பரிந்துரை செய்ய விரும்பவில்லை. அது படைப்பாளியின் வேலையும் இல்லை. இந்த புதினம் என்னை திருப்தியடைய செய்ததால் தான் சோம்பேரியாகிய நான் அடுத்ததாக 'நிர்மலாவைக் கடப்பது' எழுதிக் கொண்டிருக்கிறேன். விடுதலையும், காதலும் தான் என் எழுத்தின் மையம். வாழ்க்கையை கொண்டாட நினைப்பவர்களுக்கு வலிகளைக் கடந்துபோகச் சொல்லிக்கொடுக்கிறது 'நிலாவை வரைபவன்'.

No comments:

Post a Comment